இன்னாத கூறல்
  • பத்திகள்
  • இலக்கியம்-பகிர்வுகள்
  • களம்
  • இவன்...
சமூக மாற்றத்துக்கான கல்வி- மேட்டிமைப்படுத்தலுக்கான கல்வி: முரண்கள் 11/18/2011
4 Comments
 
சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கொடுமைகளையும் இல்லாமல் அழித்தொழிக்க சிறந்த ஒரே ஒரு ஆயுதமாகப் பார்க்கக்கூடியது கல்வி. கனடாவில் நடைபெற்ற குமார் மூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவு விழா அன்று பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ‘கல்வியும் சமூகநீதியும்’ என்கிற பெயரில் ஆற்றியிருந்த சிறப்புரை இதுபற்றிய சிந்தனையைக் கிளறிவிட்டிருந்தது. சின்னத்தம்பி அவர்களின் உரையானது பெரும்பாலும் உயர்கல்வியைச் சம்பந்தமானதாகவே இருந்தது. இருந்தபோதும், எனது அனுபவத்தில் எங்களுடைய சமூகத்தில் சமூக நீதிக்கு உதவவேண்டிய கல்வியில் ஆரம்பநிலைகளிலேயே கோளாறுகள் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

என்னுடைய இளமைப்பருவத்தின் வளர் ஆக்கம் நாடக்கூடிய காலப்பகுதி யாழ்ப்பாணத்திலேயே கழிந்தது. வடமராட்சியில் பருத்தித்துறைப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஹாட்லிக் கல்லூரியில் ஆறாம் வகுப்புத் தொடக்கம் பதின்மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். வடமராட்சியில் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்பதென்பது பெரும் பேறாகவே கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஹாட்லிக்கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி என்றவாறே “பெரிய பள்ளிக்கூட” வரிசை அமைந்திருந்தது. அதே போல் மகளிர் கல்லூரிகளுக்கும் பருத்தித் துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பதாக அந்த வரிசை அமைந்திருந்தது. இங்கே உச்சாணிக்கொப்பாக இருக்கிற ஹாட்லிக் கல்லூரி, மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி மற்றும் வட இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும், யாழ்ப்பாணத்தின் ஏனைய “பெரிய” பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளிலும் என்னைப் பொறுத்தவரை இன்றுவரைக்கும் சமூகநீதி நோக்கிய கல்வியும், சமூகநீதி தொடர்பான பார்வையும் இருந்ததில்லை என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். அதற்கான காரணங்களை வருகிற பகுதிகளில் ஆராய்வோம்.

இந்தப் பாடசாலைகளில் தமது பிள்ளைகள் கல்வி கற்பதை பெருமையாகக் கருதுகிற மனப்பாங்கு எங்கள் பிரதேச மக்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம், இந்தப் பாடசாலைகளில் தரத்தில் மிகவும் உயர்ந்த கல்வி கிடைப்பதாக கட்டமைக்கப்பட்ட விம்பமேயாகும். இதை ஒரு விம்பம் என்று எப்படிக் குறிப்பிடமுடியும் என்று இங்கே கேள்வியெழுப்பல் அவசியமாகிறது. தனியார் பாடசாலைகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்துகிற நாடுகளில் (இந்தியா) கல்வித்தரம் பற்றிய பிரச்சினைகள் இருக்கும். ஆனால், ஒரே பாடத்திட்டம் அமுலில் இருக்கக்கூடிய இலங்கைப் பாடசாலைகளான ஹாட்லிக் கல்லூரிக்கும், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் கல்வித் தரத்தில் அப்படிப் பெரிதாக என்ன வித்தியாசத்தை எம்மால் எடுத்துச் சொல்லிவிட முடியும்? நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் வாழ்ந்த நான் தினமும் 20 கிலோ மீற்றர்கள் பயணம் செய்து ஹாட்லிக்கல்லூரிக்குச் சென்றதும், ஹாட்லிக் கல்லூரி இருக்கிற பிரதேசத்தில் இருக்கிற என் வயதொத்த இன்னொரு மாணவர் அதே இருபது கிலோ மீற்றர்கள் பயணம் செய்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்குப் படிக்க வந்ததும் மிகவும் முரண்பாடான கேள்விகளைத் தோற்றுவிப்பது தவிர்க்கமுடியாதது. மேலும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை விட ஹாட்லிக் கல்லூரியில் படித்தால் எனது பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்கும் என பெற்றோர்கள் நம்புவதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கமுடியுமா என்று கேட்டால், காரணம் இருக்கிறது என்றே சொல்லலாம். ஹாட்லிக் கல்லூரியில் மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான “மேல்தட்டு” பாடசாலைகளில் இதற்கான திட்டமிடலும், செயற்பாடுகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சமூக அக்கறையோடு உற்று நோக்குகிற யாருமே விளங்கிக்கொள்ளலாம்.

இந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஆறாவது வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஒத்த நடைமுறைகளையே பயன்படுத்துகிறார்கள். தற்போதைய நிலமையில் எந்தப் பாடசாலைகள் யார் யாரை தமது பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை இவர்கள் பயன்படுத்திய அதே நடைமுறையை உத்தியோகபூர்வமாக்கியிருக்கிறது கல்வித் திணைக்களம். இன்றைய நிலையில் இப்பாடசாலைகளில் ஆறாம் வகுப்பில் சேர்கிற மாணவர்கள் அவர்களது ஐந்தம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தப் பரீட்சை ஒரு மாணவனின் எதிர்காலத்தைக் கல்வியியல் ரீதியாகத் தீர்மானிக்காவிட்டாலும், சமூகவியல் ரீதியாகத் தீர்மானிப்பதில் ஓரளவுக்காவது செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது,  இலகுவாக நல்ல பெறுதிகளைப் பெறக்கூடிய மாணவர்களை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல் அல்லது பெறுபேறுகளைப் பெற முடியாதவர்களை வெளியே தள்ளிவிடல் என்பது காலம் காலமாக இத்தகைய பாடசாலைகளில் நடைபெற்று வருகிறது. அதன் பின் இப்படியான பாடசாலைகளில் திறமைக்குப் புறம்பாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் சமூகத்தில் மேன்மையான நிலையில் இருக்கக்கூடிய மக்களின் பிள்ளைகள். இப்போது யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளின் அனுமதிகிடைப்பது பெற்றோர் கொடுக்கக்கூடிய நன்கொடையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்படி வடிகட்டி எடுக்கப்படுகிற மாணவர்கள், எப்படியாவது முட்டிமோதி சமூகத்தில் நல்லநிலைக்கு, செல்வாக்குள்ளவர்களாக வருகிறார்கள். அதிலும் முக்கியமாக, கல்வித்துறையில் இம்மாணவர்கள் சேவையாற்ற வரும்போதுதான் சமூகநீதிக்கான கல்வி பற்றிய கோட்பாடுகள் ஆட்டம்கண்டு போகின்றன. 

மேற்படி பாடசாலைகளுக்கு வலுவான பழைய மாணவர் சங்கங்கள் உண்டு. மேலும், கோட்டக் கல்வித் திணைக்களம், வலயக் கல்வித் திணைக்களம் போன்ற கல்வி நிருவாகவியல் சார்ந்த தளங்களிலும் இப்பாடசாலைகளின் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள் அல்லது அந்தத் தளங்களில் இருப்பவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய தளங்களில் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இங்கேதான் சமநிலை முற்றாகக் குழம்பிப் போகிறது. நல்ல பெறுபேறுகளைப் பெறக்கூடியவர்கள் என வடிகட்டப்பட்ட இந்த மாணவர்களுக்கு, நல்ல ஆசிரியர்கள், நல்ல திட்டங்கள் போன்ற எல்லாமே நல்லதாகக் கிடைக்க ஆரம்பிக்கிறது. அப்படிக் கிடைக்கத் தொடங்கியதும் அவர்கள் தருகிற பெறுபேறுகளும் நல்லவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் இப்பாடசாலைகளின் மேட்டிமைத்தனம் மேலும் மேலும் நிரூபணமாகி வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பாடசாலைகளில் அடித்தட்டைச் சேர்ந்த சிறிய தொகையேயான மாணவர்கள் ‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம்’ என்பது போல பயனடைகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதும் இப்படியான கல்விமுறையானது திரும்பத்திரும்ப ஒரு மேட்டிமைச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலேயெ முன்னிற்கிறது என்பது வெட்ட வெளிச்சம். இதை உடைப்பதில் பெரும் தடையாக இருப்பது இந்தப் பாடசாலைகள் தம்மைச் சுற்றி எழுப்பிவைத்திருக்கிற ஒளிவட்டமும், இந்தப் பாடசாலைகளில் கற்று வெளியேறுகிற மாணவர்களின் மத்தியிலே இயல்பாகவே விதைக்கப்படும் மேட்டிமைத்தனமுமே என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், பாடசாலைகளுக்கு வளங்களை ஒதுக்குவதில், முக்கியமாக பாடசாலைகளின் முக்கிய வளமான ஆசிரியர்களை ஒதுக்கும்போது கல்வித் திணைக்களம் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வது கண்கூடு.  நண்பர் ஒருவர் ஒருமுறை பேசும்போது “வடமராட்சி கிழக்கில இருக்கிறவனுக்கு எல்லாம் என்னத்துக்கு நல்ல வாத்திமார். அவங்களைத் தூக்கி எங்கட பள்ளிக்கூடங்களில போட்டாத்தான் சரி. அப்பிடியெண்டாத்தான் கூடப்பேர் யூனிவேசிற்றி போவாங்கள்’ என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. வளங்கள் மறுக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் கூடிய வளங்களைக் கொடுப்பதில் உரிமைகள் மறுக்கப்பட்ட நாங்களே எவ்வளவு மோசமான மனோநிலையுடன் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்குரியதும் வெட்கப்படவேண்டியதுமான ஒரு செயலே.

இன்றைக்கு ஓரளவுக்கு இந்த நிலையில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்திருப்பதற்கு முக்கிய காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களையே (Tuition Centers) பார்க்கலாம். யாழ்ப்பாணத்தில் அதிகளவு பணம் புரள்கிற ஒரு தொழிலாக இந்தத் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் தொழில்களைப் பார்க்கலாம். அதற்காக அந்தக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் மீது முழுமையாக நாங்கள் பழிபோட்டுவிட முடியாது. இன்றைக்குக்கூட ‘குரு-சிஷ்ய’ உறவுக்கு மேலாக ‘பெற்றோர்-பிள்ளை’ உறவு போலத் தொடர்கிற இந்தத் தனியார் கல்விநிலைய ஆசிரியர்- மாணவர் உறவைக் காணமுடியும். முழுமையான அர்ப்பணிப்போடு கற்பிக்கிற அந்த ஆசிரியர்களை இந்த சமூகநீதி தொடர்பான பார்வையின்மைக்குக் காரணமான குற்றவாளிகளாகக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. கல்வி சந்தைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இருந்த முழுச் சமூகமும் இந்த விடயத்தில் குற்றவாளிகளே. கல்வியின் சந்தைத் திறலைச் சரியாக உணர்ந்துகொண்ட சில தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் வந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பற்றிக்கொண்டார்கள். இந்த நிறுவனங்கள் மேற்படி மேற்றட்டுப் பாடசாலைகள் உருவாக்கிய மாயவிம்பத்தை ஓரளவுக்குச் சரிசெய்தாலும், அவை இன்னொருவகைச் சமச்சீரற்ற தன்மையை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனிலிருக்கக்கூடிய வேறுபாடுகளை இந்தத் தனியார் நிறுவனங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. அதாவது நன்றாகச் சொல்லித்தரக்கூடியவராகக் கருதப்பட்ட ஆசிரியர்களை இந்நிறுவனங்கள் வடிகட்டித் தமதுடமைகளாக ஆக்கிக்கொள்ளத் தொடங்கின. இந்நிலை காரணமாக இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் கூட மேலே சொன்ன ‘மேற்றட்டுப் பாடசாலைகள்’ மற்றும் ஏனைய பாடசாலைகளுக்கு இடையே இருந்த சமச்சீரற்ற தன்மை இக்கல்வி நிலையங்கள் மத்தியிலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

இந்த சமச்சீரற்ற தன்மையை மாற்றுதல் தொடர்பில் மிகச் சிலரே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக என்னோடு இதே சமூகத்தில் படித்து பொறியியலாளராக (அதாவது, எமது சமூகத்தின் மேன்மை மிகு தொழில் செய்பவராக) இருக்கிற நண்பர் ஒருவர் கல்வியின் சமூகநீதி தொடர்பான பாத்திரத்தை மறுதலிக்கக்கூடிய கல்வியியலாளர்களை நோக்கிக் காட்டமான ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார். 1985 ம் வருடம் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கான பொறியியல் பீடம் பற்றி வைத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற மோசமான குழிபறிப்புகள் பற்றியதாகவே அவரது கேள்வி அமைந்திருந்தது. அது தொடர்பில் அவர் எழுதிய பத்தியின் சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம் ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும்
கோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன் அமைவிடம், கிளிநொச்சியிலா யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.
 

மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.

(வடலியூரான்; ஆவணி 2, 2011) 

மேற்படி துரைராசா அவர்களின் பிரேரணை ஓரளவுக்காவது கைகூடி வருவதைத் தடுப்பதில் முன்னிற்பவர்கள் யாரென்று பார்த்தால், கல்வி மூலமாகத் தம்மை மேட்டிமைப்படுத்திக்கொண்ட கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரே. நல்லவேளை, மேற்படி நண்பர் போன்ற பரந்துபட்ட பார்வையுள்ளவர் சிலரும், சமூகம் தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்கிற ஆர்வலர் சிலரும் இருப்பதாலேயே ஓரளவுக்காவது பாதிக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச நியாயமாவது கிடைக்கிற சாத்தியக்கூறுகள் பற்றிய நம்பிக்கைகள் இன்றைக்கும் குறைவின்றி இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எம்மிடையே வாழ்கிற எமது சகோதரர்களையே முறையற்ற ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி வந்திருக்கிறோம். இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளை, வன்கொடுமைகளை இல்லாமலொழிக்கக்கூடிய வல்லமை மிகுந்த ஒரே ஆயுதம் கல்வி. சமூக மாற்றத்துக்காக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட எமது இன விடுதலைக்காகவும் அனைவருக்குமான கல்வி அத்தியாவசியமாகிறது. இவ்வாறாக மனித நாகரிகத்தின் முக்கிய கூறான கல்வி சந்தைப் பொருளாவதையும், அது சரியான முறையில் கிடைக்கவேண்டியவர்களுக்குக் கிடைக்காமலிருப்பதையும் கண்டுகொள்ளாமல், கிடைக்கிற வரைக்கும் இலாபம் என சிந்திக்கும் திறணை, பகுத்தறிவைத் தன்னுள்ளே கொண்ட மனித குலம் சுரணையற்றிருப்பது மானுட குல வரலாற்றில் அழியாத கறை. 


4 Comments
 
சதீஸ் கொலை/மரணம் தொடர்பில் (இற்றைப்படுத்தப்பட்டது) 01/29/2011
3 Comments
 
முன்னைய பத்தியில் சதீஸ் கொலை செய்யப்பட்டார் என ஆரம்பகட்டத்தில் இரண்டு மூன்று இணையத்தளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே எழுதினேன். யாழ் இணையத்தில் ஈழநாதம் மற்றும் தமிழ்த்தாய் ஆகிய இணையத்தளங்களை மேற்கோள்காட்டி இதைப்பற்றி எழுதியிருந்தார்கள். தமிழ்த்தாய் இணையத்தளத்தில் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது.
Picture
Picture
ஈழநாதம் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:
Picture
ஆனால் இப்போது உதயன் வெளிவிட்டிருக்கிற செய்தி இந்த இரு செய்திகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. சதீசின் சாவு ஒரு வீதி விபத்தே என்று சட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்தது என்று உதயன் இணையப்பதிப்பில் செய்திவெளிவிடப்பட்டிருக்கிறது. குழப்பங்களின் எல்லையில் நான் நின்றுகொண்டிருக்கிறேன் இப்போது என்பதை மட்டுமே உறுதிப்படுத்தமுடிகிறது என்னால்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, சதீஸ் எப்படி இறந்தார் என்பதை விட, அவர் இறப்பு தொடர்பில் இருக்கிற சில கருத்துக்கள் பிழையென்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் ஆனைவிழுந்தானுக்கும் வல்லிபுரத்துக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டமற்ற இடத்தில் இப்படியான மோசமான விபத்துக்கான சாத்தியங்கள் பற்றிய கேள்விகளும் மனதைவிட்டு அகல மறுக்கின்றன. அவரது மரணத்துக்கான காரணங்கள் தொடர்பில் தவறாக நான் வாசிப்போரை வழிநடத்தியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
3 Comments
 
பிணம்தின்னும் சாத்திரங்கள் 01/29/2011
2 Comments
 
தெரிந்த முகங்களின் அகால மரணங்கள் இலகுவில் யாரையும் உலுக்குவதுண்டு. இந்த வருடத்தின் முதல் நாளிலும், இன்றைக்கும் எனக்குத் தெரிந்த முகங்களின் மரணங்கள் என்னை உலுக்கித்தான் இருக்கின்றன. முதல் மரணம் தவராசா கேதீஸ்வரன் என்கிற என்னுடைய வயதொத்த, என்னுடைய பாடசாலையில் படித்த (வணிகப்பிரிவோ, கலைப்பிரிவோ சரியாகத் தெரியாது), என்னுடன் பாடசாலை மாணவர் தலைவர்களில் ஒருவனாகக் கடமையாற்றிய இளைஞனுடையது. இவர் டிசம்பர் 31, 2010 இரவு கொல்லப்பட்டார். இரண்டாவது இன்று சனிக்கிழமை (சனவரி 29, 2011) கொல்லப்பட்ட இராசரத்தினம் சதீஸ் என்பவருடையது. இவரும் நான் படித்த பாடசாலையில் என்னைவிட இரண்டோ, மூன்று வகுப்புகளுக்கு முன்னால் படித்தவர். விளையாட்டுப்போட்டிகளில் என்னுடைய இல்லத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டதுக்காகச் சொல்லப்படுகிற காரணங்கள் மிகவிசித்திரமாக எனக்குத் தோன்றுகின்றன. இரண்டு காரணங்களும் முரண்களின் உச்சமாகப்படுகின்றன. ‘போரின் பக்கவிளைவுகள்’ என்று சொல்கிற அறிவுசீவிகள் மீது கோபத்தை ஏற்படுத்துகின்றன.


Read More
2 Comments
 
செருப்பாய் இருப்போம்... 01/15/2011
6 Comments
 
மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய வசனம் மற்றும் இன்னபிற சினிமாச் சர்ச்சைகளை முன்வைத்து.

'த்ரிஷாவின் செருப்பாக நடிக்கவும் தயார்’ என்கிறமாதிரி ஒரு எள்ளலை புலம்பெயர் தமிழர்களை நோக்கி அள்ளிவிட்டிருக்கிறார் அறிவுசீவி கமல்ஹாசன். Pre DVD Rip ல் ஒழுங்கான சத்தம், காட்சிகள் இல்லாமல் பார்த்த எனக்கே கோபம் பொத்துக்கொண்டுவந்தபோது, அறிவுசீவி கமலின் படங்களுக்கு முன்னோட்டம் பின்னோட்டம் எல்லாம் எழுதி முதல்நாள் முதல்காட்சி பார்த்தவர்கள் வயறெரிந்து சாபம் போடுவதில் பிழை ஒன்றும் இல்லைத்தான். ஆனால் இந்தக் கோபம் எதனடிப்படையில் வருகிறது என்று ஆராய்வோமானால் சில உண்மைகள் தெரியும். எந்தளவுக்கு தமிழக சினிமாவால், தமிழகத் தொலைக்காட்சிகளால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இந்தக் கோபம் சிலவேளை நடிகை ஒருவருக்கு செருப்பாக நடிக்கிறேன் என்று சொல்லாமல் ‘விஜய்க்கு செருப்பாக நடிக்கத் தயார்’ ‘ரஜினிக்கு பின்பக்கம் கழுவ ரெடி’ ஏன் ‘அறிவுசீவிக்கு கொம்பு நீவிவிடுவது பாக்கியம்’ என்கிற ரீதியில் வசனம் எழுதப்பட்டிருந்தால் விசிலடித்துப் பாராட்டியும் இருப்போம்.

இந்தச் சர்ச்சையின்  அடிவேர் இரண்டு விடயங்களில் இருக்கிறது. ஒன்று கமல்ஹாசனின் அரசியல் தேர்வு. இரண்டாவது, இவ்வாறான எள்ளல்கள் மற்றும் ஈழத்தமிழர்களைத் தங்களின் ஒரு சந்தையாக மட்டும் பார்க்கக்கூடிய இந்தத் தமிழகச் சினிமாக்காரர்களின் மனநிலைக்கு எதிர் அரசியல் பேசக்கூடியளவுக்கு எமக்கான சினிமா எங்களிடம் இல்லாமை. இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் இந்தச் சர்ச்சையை அணுகலாம் என நினைக்கிறேன்.


Read More
6 Comments
 
தலித்தியம் யாழ்ப்பாண சமூகத்துக்கு அவசியம்தானா? 12/12/2010
13 Comments
 
(யாழ்ப்பாணம்! மேட்டுக்குடி!! தலித்தியம்!!! என்கிற தலைப்பில் ஜனார்த்தனன் கந்தையா எழுதிய பத்தியை முன்வைத்து)

ஜனார்த்தனனின் கட்டுரையின் ஆரம்பமே புலம்பெயர்ந்த இடங்களில் எழுதிவருகிற எழுத்தாளர்களைப் பற்றித் தொட்டுச் செல்வதால் தொப்பி அளவாகிறது இங்கே. என்னைப் பொறுத்தவரை ‘அழகான உயரமான படித்த உயர் சைவ வேளாள மாப்பிள்ளைக்கு, அதே உயர் சைவ வேளாள குலத்தைச் சேர்ந்த அழகான படித்த பெண் தேவை’ என்கிற பொருள்பட விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பது சரியென்றால் ‘நெடிதுயர்ந்த, திடகாத்திரமான படித்த பள்ளர் குல ஆண் மகனுக்கு, சகல சௌபாக்கியமும் பொருந்திய நிறைவான பறையர் குலப் பெண்மகள் தேவை’ என்பதுமாதிரியான விளம்பரங்களும் வரவேண்டும் என்கிற போராட்டம் மிகவும் சரியே.


Read More
13 Comments
 
I am a Tamil Queer 10/31/2010
4 Comments
 

CTBC வானொலி விளம்பரம், அதன் பின்பான சர்ச்சைகளை முன்வைத்து

"Toronto mayoral campaign ends on a hateful note" என்ற Globe and Mail தலையங்கம் சாலப்பொருந்தும், Canadian Tamil Broadcasting Corporation எனப்படும் CTBC வானொலியில் ஒலிபரப்பான 35 செக்கன்கள் நீடிக்கும் விளம்பரம் கிளப்பிய சர்ச்சைகளை ஒரு வசனத்தில் அடக்க. ரொரொன்ரோவின் நகரபிதாவைத் தெரிவு செய்வது தொடர்பில் நடந்த தேர்தல் சம்பந்தமான நிகழ்வுகளில் ஆகக்கூடிய கசப்புணர்வையும், இலங்கைத் தமிழர்கள்பால் கனேடிய மத்தியதர வகுப்பு பொது உரையாடற் தளங்களில் வெறுப்பை உமிழ்வதற்கு அடுத்த காரணத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் Globe and Mail செய்தியின் பின்னூட்டல்களில் அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு அமைந்திருக்கிறது:

This is another example of why the effects of Canada multiculturalism and immigration policies must be studied regarding how they affect gays/lesbians and women already living here. Frankly, I don't want a country ruled by superstitions imported from the third world.

மேற்படி பின்னூட்டத்தை 124 பேர் ஆதரித்திருக்கிறார்கள். 34,296,000 பேரை வெறும் 124 பேர் பிரதிநிதித்துவப் படுத்தமாட்டார்கள் என்று உதறித்தள்ளினால், “புள்ளிவிபரவியல்” என்கிற கோட்பாடு கிலுகிலுத்துப் போகும். இதுபற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

Read More
4 Comments
 
கனேடிய தமிழர் பேரவை உடைப்பும் கணனித் திருட்டும் 09/19/2010
1 Comment
 
கனேடியத் தமிழர் பேரவையின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணனி ஒன்று களவாடப்பட்டது தொடர்பில் பெருமளவுக்கு எங்கள் ஊடகங்கள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அருண்மொழிவர்மனின் பதிவொன்றின் மூலமாகவே இந்தச் செய்தி எனக்குத் தெரியவந்தது. அதுவும் கனேடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரான திரு டேவிட் பூபாலபிள்ளை முதலில் வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்க்கும்போது இது நிச்சயமாக முதனிலை ஊடகங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய செய்தியாகவே இருந்திருக்கவேண்டியது. ஆனால் அதன் பின்னர் திரு. பூபாலபிள்ளை அடித்த குட்டிக்கரணங்களைப் பார்க்கும்போது ஊடகங்கள் புதுக்கடைத் திறப்புவிழாவுக்குப் போயிருந்தது நியாயமானதொரு செயலாகவே எனக்குத் தெரிகிறது.


Read More
1 Comment
 

    இதுவரை கிறுக்கியவை

    November 2011
    January 2011
    December 2010
    October 2010
    September 2010

    வகைகள்

    All
    இற்றைப்படுத்தல்
    பொதுவெளி
    தற்பாலினர்
    அரசியல்
    அறிவுஜீவிகள்
    ரொரொன்ரோ
    அயோக்கியத்தனம்
    நகரபிதா
    சினிமா
    கல்வி
    தேர்தல்
    கனடா
    டேவிட் பூபாலபிள்ளை
    கனேடியத் தமிழர் பேரவை
    கண்டனம்
    சமூகநீதி
    இளையபாரதி
    அறிவுஜீவி
    Ctbc
    சமூகம்
    ஊடகங்கள்
    எதிர்வினை
    சாதியம்
    கமல்ஹாசன்

    RSS Feed